மாநகராட்சி ஊழியர்களுடன் பா.ம.க.வினர் வாக்குவாதம்


மாநகராட்சி ஊழியர்களுடன் பா.ம.க.வினர் வாக்குவாதம்
x

பதாகையை அகற்றியதை கண்டித்து மாநகராட்சி ஊழியர்களுடன் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கட்சி நிர்வாகிகள் பதாகைகள் வைத்திருந்தனர். இதற்கிடையே மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகில் வைக்கப்பட்டிருந்த பதாகையை, நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி லாரியில் ஏற்றினர். இதுபற்றி அறிந்த பா.ம.க. முன்னாள் மாநில மாணவரணி செயலாளர் விஜயவர்மன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், மாவட்ட தொழிற்சங்கம் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் லாரியை அங்கிருந்து செல்ல விடாமல் சிறைபிடித்து, மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பா.ம.க.வினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி ஊழியர்கள், அகற்றிய பதாகையை மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுவதாக கூறினர். தொடர்ந்து அவர்கள், பதாகையை கம்பில் கட்டி வைத்துவிட்டு சென்றனர். இதனால் பா.ம.க.வினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story