அழிவின் விளிம்பில் அம்மா உணவகங்கள்


அழிவின் விளிம்பில் அம்மா உணவகங்கள்
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:46 PM GMT)

கொரோனா காலத்தில் பசியை போக்கிய உணவகத்துக்கு வந்த சோதனை: குறைந்த நிதி ஒதுக்கீடு... பராமரிப்பு இல்லை... அழிவின் விளிம்பில் அம்மா உணவகங்கள் ஏழைகளின் அட்சயபாத்திரத்தை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

விழுப்புரம்


விழுப்புரம்

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. முதலில் சென்னையிலும் அதன்பிறகு தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஏழைகளின் அட்சய பாத்திரமாக செயல்பட்டதால் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அரசு பொது மருத்துவமனைகளிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் உணவு வாங்க வெளியே செல்ல வேண்டாம், அதிகம் செலவழிக்கவும் வேண்டாம் என்ற நிலையை இத்திட்டம் ஏற்படுத்தியது.

கொரோனா காலத்திலும் சேவை

இந்த அம்மா உணவகத்தில் காலை உணவாக இட்லி ரூ.1-க்கும், மதிய உணவாக சாம்பார், தயிர் சாதம் தலா ரூ.5-க்கும் வழங்கப்படுகிறது. காலை உணவு 7 மணி முதல் 10 மணி வரையும், மதிய உணவு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையும் வழங்கப்படுகிறது.

நகரின் உட்புறப்பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் பசியாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த அம்மா உணவகம், கொரோனா ஊரடங்கு காலத்தில் தடையின்றி இயங்கியதன் மூலம் இலவசமாக 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைவருடைய பசியையும் போக்கியதை யாராலும் எளிதில் மறக்கவும், மறுக்கவும் முடியாது.

மூடப்பட உள்ளதா?

இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்த உடனேயே சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகம் தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, சூறையாடப்பட்ட அம்மா உணவகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தார். சில இடங்களில் போர்டுகள் அகற்றப்பட்டன. அதோடு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்ட அம்மா உணவகம் இனி கலைஞர் உணவகமாக பெயர் மாறும் எனவும், அம்மா உணவகத்திற்கு மூடு விழா நடத்தப்படும் எனவும் பல்வேறு விதமான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அதை மெய்ப்பிக்கும் வகையில் அம்மா உணவகங்கள் பல்வேறு பிரச்சினைகளை சுமந்து கொண்டு செயல்பட்டு வருகின்றன.

மக்கள் வருகை குறைவு

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகிலும், திண்டிவனத்தில் செஞ்சி சாலை பஸ் நிறுத்தம் அருகிலும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் அருகிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகத்தில் தலா 10 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அம்மா உணவகம் மட்டும் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. திண்டிவனத்தில் உள்ள அம்மா உணவகம் பஸ் நிலையம் அருகில் செயல்படுவதால் அங்கு முன்பு இருந்ததைப்போன்று மக்கள் வருகை இல்லாவிட்டாலும் எதிர்பார்க்கும் அளவிற்கு மக்கள் இங்கு வருவதாக அம்மா உணவக பணியாளர்கள் கூறுகின்றனர்.


Next Story