அ.ம.மு.க. பிரமுகர் வீடு உள்பட 2 வீடுகளில் 41 பவுன் நகைகள்-பணம் கொள்ளை


அ.ம.மு.க. பிரமுகர் வீடு உள்பட 2 வீடுகளில் 41 பவுன் நகைகள்-பணம் கொள்ளை
x

அ.ம.மு.க. பிரமுகர் வீடு உள்பட 2 வீடுகளில் 41 பவுன் நகைகள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

அ.ம.மு.க. நிர்வாகி

பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் 9-வது வார்டுக்கு உட்பட்ட ரெங்கம்மாள் நகர், அவ்வை தெருவை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 37). பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் குடும்பத்துடன், அதே பகுதியில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார். ஜெயராமன் துபாயில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருவதால், பெரம்பலூரில் உள்ள வீட்டில் திவ்யா(34) தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி திவ்யா வீட்டை பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, நெய்குளத்தில் உள்ள தனது அண்ணன் பொய்யாமொழி வீட்டிற்கு சென்றிருந்தார்.

நகை-பணம் கொள்ளை

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி, 2 குழந்தைகளுடன் திருச்சியில் உள்ள மாமனார் வீட்டிற்கு கலைவாணன் சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று வேலைக்கு செல்வதற்காக அவர் மட்டும் திருச்சியில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.15 மணிக்கு கலைவாணன் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் சாவியால் திறக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.47 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கேமரா ஒன்று ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

உரிமையாளர் வீட்டிலும்...

இதையடுத்து அவர் உடனடியாக தரைதளத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கேயும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கலைவாணன் இதுகுறித்து திவ்யாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரும் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது அவரது வீட்டிலும் பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 28 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம், 4 ஜோடி வெள்ளிக்கொலுசுகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து கலைவாணனும், திவ்யாவும் இது குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அதன்பேரில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். 2 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் அலுவலகம் அருகே...

திருட்டு நடந்த வீடுகளின் அருகேயே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் அலுவலகம் உள்ளது. போலீஸ் அலுவலகம் அருகே உள்ள வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story