முக்கொம்பு காவிரி பாலத்தில் மற்றொரு மதகிலும் விரிசல்


முக்கொம்பு காவிரி பாலத்தில் மற்றொரு மதகிலும் விரிசல்
x

முக்கொம்பு காவிரி பாலத்தில் மற்றொரு மதகிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி

ஜீயபுரம்:

முக்கொம்பு

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக முக்கொம்பு உள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

இவ்வாறு மேட்டூரில் இருந்து வரக்கூடிய தண்ணீர் திருச்சியை அடுத்த திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி நடைபெறும் காவிரி ஆற்றின் அருகில் கூம்பு போன்ற இட அமைப்பை கொண்டு, அந்த பகுதியில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிந்து செல்கிறது. இதனால் இந்த பகுதி முக்கொம்பு என பெயர் பெற்றது.

காவிரி- கொள்ளிடம்

முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் பாலம் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்ததாகும். கடந்த 2018-ம் ஆண்டு அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்த பாலத்தின் 5-வது மதகு முதல் 9-வது மதகு வரையுள்ள பகுதி இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கொள்ளிட பாலம் கட்டப்பட்டது. அதேபோல் மற்றொரு பகுதியில் உள்ள காவிரி பாலமானது 42 மதகுகளை கொண்டதாகும். இந்த பாலம் கடந்த 1974-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை கட்டி முடிக்கப்பட்டது.

அவ்வப்போது காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள், வர்ணம் பூசும் பணி நடைபெறும். இந்த பாலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் காவிரி பாலத்தில் உள்ள 35-வது மதகுப்பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவிரி பாலமானது பக்கவாட்டில் இருந்து விலகி மேற்கு பகுதி நோக்கி சாய்ந்துள்ளது. இந்த விரிசலானது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு குறைவான அளவில் இருந்தது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல விரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் காவிரி பாலம் உடையும் அபாய நிலையில் உள்ளதா? என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தடுப்பு கம்பிகள் அகற்றம்

இந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மேலணை காவிரி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லாதவாறு பாலத்தின் முன் பகுதியில் இரும்பு தூண் கொண்டு தடுப்பு கம்பிகளை அமைத்தனர்.

காவிரி பாலத்தில் விரிசலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நாளடைவில் இரும்பு தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு, பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் மற்றும் வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு செல்லக்கூடிய லாரிகள் உள்ளிட்டவை சென்று வருகின்றன.

மற்றொரு மதகில் விரிசல்

இந்த நிலையில் காவிரி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட 35-வது மதகின் அருகில் உள்ள 38-வது மதகு பகுதியில் பாலத்தின் பக்கவாட்டிலும் புதிதாக விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பாலத்தின் மற்றொரு மதகுப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாலத்தின் அடிப்பகுதியில் 'காப்பர் பீம்' போட்டு கட்டப்பட்டுள்ளதால் பாலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகும் நிலையில், இந்த பாலமானது உடையும் நிலை ஏற்பட்டுவிடுேமா? என்று அச்சமடைந்துள்ள விவசாயிகள், அதை தடுக்க உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story