எங்கேயும், எப்போதும் சமர்ப்பிப்போம் , ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் எங்களிடம் உள்ளது - ஈஷா அறக்கட்டளை பதில்


எங்கேயும், எப்போதும் சமர்ப்பிப்போம் , ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் எங்களிடம் உள்ளது - ஈஷா அறக்கட்டளை பதில்
x

ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் தங்களிடம் உள்ளது என்றும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அதை எங்கேயும், எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் என்றும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

சென்னை

செனனை,

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சிலை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியின பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்தம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துறை துணை இயக்குனர் ஆர்.ராஜகுரு கோர்ட்டில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஆதியோகி சிலை மற்றும் கட்டுமான பணிகளுக்கு திட்ட அனுமதியோ அல்லது கட்டுமான அனுமதியோ வழங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் எங்களது அலுவலகத்தில் இல்லை. மாவட்ட கலெக்டர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்தும் தடையில்லா சான்று பெற்றதற்கான ஆவணங்களும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர், உரிய அனுமதி பெறபடவில்லை என தெரியவந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஷா யோகா மையம் தன்னிடம் உள்ள ஆவணங்களை 2 வாரத்திற்குள் அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதற்கிடையே, ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்க கோவை மாவட்ட கலெக்டர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி வழங்கிய அனுமதி கடிதத்தை ஈஷா அறக்கட்டளை வெளியிட்டு, அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கேயும், எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அதனை அதிகாரிகள் முன்பு சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ஈஷா அறக்கட்டளை சார்பில், ஈஷா ஆதியோகி சிலை அமைப்பதற்காக சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெறப்பட்டுள்ள தடையில்லா சான்றுகள், அனுமதி ஆவணங்களை அதிகாரிகள் முன் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.


Next Story