ஆதிதிராவிட நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


ஆதிதிராவிட நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் 12 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 4 என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மேற்கண்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வி தகுதி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது எழுத்து மூலமாக விண்ணப்பித்தினை உரிய கல்வித் தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகின்ற 18-ந் தேி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story