சதுரகிரி கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி


சதுரகிரி  கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
x

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கி நடைபெற்றது.

நவராத்திரி 10 நாட்களும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். நவராத்திரியின் கடைசி நாளான நேற்று ஆனந்தவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 11 மணி அளவில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் வளாகத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு மலைவாழ் மக்கள் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தனர்.

பின்னர் மதியம் ஆனந்தவல்லி அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட அம்பை வாழை மரத்தில் எய்தார். இந்த விழாவில் திரளானோர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், மற்றும் நவராத்திரி விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story