திருட்டு, கொலைமுயற்சியில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் திருட்டு, கொலைமுயற்சியில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருட்டு, கொலைமுயற்சியில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

தூத்துக்குடி தாளமுத்துநகர் நேரு காலனியை சேர்ந்த சுடலைமுத்து மகன் மகாராஜா என்ற பால் மகாராஜா (வயது 39) என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி அன்பு (32) என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் மகாராஜா என்ற பால் மகாராஜாவை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். இதே போன்று தூத்துக்குடி அனல்மின்நிலைய குடோனில் இருந்து பொருட்களை திருடிய வழக்கில் கோவில்பட்டி திலகர் நகரை சேர்ந்த ரசல் மகன் ஜெயபிரேம் சிங் (42), தெர்மல்நகர் முத்து நகரை சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (26) மற்றும் சிலர் தெர்மல்நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மகாராஜா என்ற பால் மகாராஜா, ஜெயபிரேம் சிங், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உள்பட 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com