ரூ.100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


ரூ.100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 10 Sep 2023 7:08 AM GMT (Updated: 10 Sep 2023 8:29 AM GMT)

எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியில் ரூ.100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், புதிய பயனாளிகளை சேர்க்கும் முகாம்கள், தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 'வரும் முன் காப்போம்' என்ற திட்டம் 'கலைஞரின் வரும் முன் காப்போம்' என்ற பெயரில் கடந்த 3 ஆண்டாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கு 3 இடங்களிலும், மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும், சென்னையில் மட்டும் 15 இடங்கள் என ஒவ்வொரு ஆண்டும் 1260 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ துறையின் அடுத்த கட்டமாக 'மருத்துவ ஆராய்ச்சி மையம்' டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதன்படி இங்கு ரூ.100 கோடி செலவில் ஒரு மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம், கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்ற வகையில் புதிய கட்டிடம் வர இருக்கிறது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி முடிவுற்றுள்ளது.

திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணியும் வரைபடம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் டெண்டர் விடப்பட்டு, முதல்-அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்று வரும் முகாம் போல் 234 தொகுதிகளிலும் புதிய பயனாளிகளை சேர்க்கும் முகாம் நடத்தப்படும். இதில் 100 தொகுதிகளில் ஒரே நாளில் 100 முகாம்கள் நடத்தப்படும். அந்த தொகுதிகள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story