கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: வீட்டு வாசல்களில் கோலமிட்டு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெண்கள்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: வீட்டு வாசல்களில் கோலமிட்டு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெண்கள்
x
தினத்தந்தி 15 Sep 2023 5:56 AM GMT (Updated: 15 Sep 2023 6:04 AM GMT)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கடலூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான இன்று அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின்கீழ் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அதேவேளை, நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

வங்கிக்கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டதாக தங்களது செல்போன்களில் வந்த மெசேஜை பார்த்து மகிழ்ந்த பெண்கள், இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

அத்துடன், கடலூர், கோவில்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் கோலங்களின் மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story