

தருமபுரி,
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை தொடங்கி வைத்த பின், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி.
தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. கோட்டைக்கு சென்ற நான் இட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை தான்.
யாருக்கெல்லாம் ரூ.1000 அவசியமோ அவர்களுக்கு எல்லாம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.12,000 வங்கிக்கணக்கு மூலம் மகளிருக்கு செலுத்தப்படும். கட்டுமான பணியில் ஈடுபடும் மகளிர், மீனவ பெண்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து திட்டமிட்டு தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சரிசெய்து உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் பயன்பெற போகிறது.
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவர உழைக்கிறோம்.
காலையில் பசியோடு வரும் பிள்ளைகள் எப்படி கல்வி கற்க முடியும் என்பதை மனதில் கொண்டு தொடங்கப்பட்டதே காலை உணவுத் திட்டம். அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும். காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
காலை உணவு திட்டம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.