சொத்துகுவிப்பு வழக்கு... சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மனு தாக்கல்


சொத்துகுவிப்பு வழக்கு... சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மனு தாக்கல்
x

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது.

சென்னை,

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், அமைச்சர் உள்பட மூவரையும் விடுதலை செய்வதாக ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்ததை அடுத்து அடுத்த சில நாட்களில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது.

இதையடுத்து தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு மறு ஆய்வு வழக்குகளின் விசாரணை பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தினசரி அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்குகள் தொடர்பாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஐகோர்ட்டில் தங்களுக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் யாரும் மேல்முறையீடு செய்யாத நிலையில், சுயமாக ஐகோர்ட்டு மீண்டும் விசாரிப்பதற்கு மனுவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



Next Story