

திருச்சி ஜங்ஷன் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் புகுந்து தாக்குதல்
திருச்சி ஜங்ஷன் பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று மாலை 4 மணி அளவில் 2 இளைஞர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் திடீரென கடையில் பணியில் இருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரத்துடன் கடைக்குள் புகுந்த வாலிபர் விற்பனையாளர் செல்வேந்திரன் மீது மதுபாட்டிலால் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்து தடுக்க வந்த 2 பேர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த இடத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் தாக்குதல் நடத்திய 2 பேரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். உடனே இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து வாகனம் மூலம் அங்கு வந்த போலீசார் அவர்களில் காயம் அடைந்த ஒருவரை வாகனத்தில் அழைத்து கொண்டு தாக்குதல் நடத்திய நபர்களை தேடி சென்றனர்.
2 பேரிடம் விசாரணை
இதனிடையே அங்கு நடந்து சென்ற அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது பாட்டிலால் தாக்கியவருக்கும் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்து கொண்டு இருந்ததால் அவரை ஆட்டோவில் ஏற்றி போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.