ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி


ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி
x
தினத்தந்தி 4 Aug 2023 6:01 AM GMT (Updated: 4 Aug 2023 6:06 AM GMT)

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் 17-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story