பெற்றோர் கண்டித்ததால் வீட்டிலிருந்து மாயம்: மின்சார ரெயில் மோதி பள்ளி மாணவன் பலி - தற்கொலையா? போலீசார் விசாரணை


பெற்றோர் கண்டித்ததால் வீட்டிலிருந்து மாயம்: மின்சார ரெயில் மோதி பள்ளி மாணவன் பலி - தற்கொலையா? போலீசார் விசாரணை
x

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டிலிருந்து மாயமான பள்ளி மாணவன் மின்சார ரெயிலில் அடிபட்டு பலியானார்.

சென்னை

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ஐஸ்வர்யா குபேர நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அரவிந்தன் (வயது 14). பள்ளி மாணவரான இவர், வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவுடன் தாம்பரம் ரெயில்வே போலீசார் இறந்த அரவிந்தன் உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்

விசாரணையில், பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் பெற்றோர் அவனை கண்டித்ததாகவும் அதன் பின்னர் வீட்டிலிருந்து மாயமான அரவிந்தன் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல திருப்பூரை சேர்ந்தவர் சையது உசேன் (22). இவரது பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் நேற்று காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பெற்றோரிடம் செல்போனில் பேசியவாறு வண்டலூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சரக்கு ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துகள் தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story