மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு - 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்


மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு - 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்
x

சென்னை மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்.

சென்னை

சென்னை கோயம்பேடு பாடிகுப்பம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அகில் வர்கிஸ் பால் (வயது 29). தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார். காற்று வாங்கியபடி மணற்பரப்பில் நடந்துக் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அகில் வர்கிஸ் பாலை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அகில் வர்கிஸ் பாலின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்து சென்றுவிட்டது. காயமடைந்த அகில் வர்கிஸ் பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவர், இந்த சம்பவம் குறித்து மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், இந்த வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டது திருவல்லிக்கேணி பழனியப்பன் கோவில் 4-வது தெருவை சேர்ந்த சபரி (22) என்ற வாலிபரும், 14 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பது தெரிய வந்தது.

இந்த வழக்கில் சபரியும், 14 வயது சிறுவனும் சிக்கினர். இதில் சிறுவன் மீது ஏற்கனவே ஒரு வழிப்பறி வழக்கு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருட்டு செல்போனுடன் 17 வயது சிறுவன் தலைமறைவாக உள்ளான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story