திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை: மணப்பெண்ணுக்கு போனில் தகவல் சொல்லிவிட்டு தூக்கில் தொங்கினார்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை: மணப்பெண்ணுக்கு போனில் தகவல் சொல்லிவிட்டு தூக்கில் தொங்கினார்
x

அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் மணப்பெண்ணுக்கு போனில் தகவல் சொல்லிவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம், ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சுதன்ராஜ் (வயது 28). இவர், தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர் இறந்து விட்டனர். இவருடைய அக்காவுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

சுதன்ராஜ், தனது தம்பி சுரேந்தருடன் வசித்து வந்தார். சுதன்ராஜ்க்கும், அவருடைய அக்காள் கணவரின் தங்கைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடைபெற இருந்தது.

நேற்று முன்தினம் இரவு சுரேந்தர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விட்டார். வீட்டில் சுதன்ராஜ் மட்டும் தனியாக இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்த சுரேந்தர், தனது அண்ணன் சுதன்ராஜ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் தலைமைச் செயலக காலனி போலீசார் விரைந்து வந்து சுதன்ராஜ் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக சுதன்ராஜ், தனக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மணப்பெண்ணுடன் போனில் பேசி உள்ளார்.

அப்போது அவர் தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி உள்ளார். ஆனால் அதனை அந்த பெண், விளையாட்டாக எடுத்து கொண்டார். அதன்பிறகே சுதன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் சுதன்ராஜ் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story