சக்கரக்கோட்டை சரணாலயத்தில் குவிந்த பறவைகள்


சக்கரக்கோட்டை சரணாலயத்தில் குவிந்த பறவைகள்
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM GMT (Updated: 23 April 2023 6:45 PM GMT)

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் வைகை தண்ணீர் நிறைந்துள்ளதால் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் வைகை தண்ணீர் நிறைந்துள்ளதால் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.

வறண்ட நீர்நிலைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரையை தேடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து தங்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து சீசன் முடிந்ததும் ஏப்ரல் மாத இறுதியில் திரும்பி செல்ல தொடங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன.

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் வரத்தால் ஓரளவு நீர் இருந்ததால் அதில் உள்ள மரங்களில் கூடுகள் கட்டி தங்கியிருந்த பறவைகள் ஏமாற்றத்துடன் தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்றுவிட்டன. இதன்காரணமாக மாவட்டத்தின் தேர்த்தங்கல் சரணாலயம் உள்ளிட்டவைகளில் பறவைகள் இன்றி கடும் நிசப்தமாகவே காட்சி அளித்தது, சரணாலய பகுதி முழுவதும் பறவைகள் இன்றி வெறும் மொட்டை மரங்களாகவே காட்சி அளித்தது.

பறவைகள் குவிந்தன

வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதாலும், வயல்வெளிகளில் பயிர்கள் கருகி விட்டதாலும் உணவுக்கு வழியின்றி அதிகமான பறவைகள் வரவில்லை. கடந்த ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் மாவட்ட சரணாலயங்களில் வந்தநிலையில் இந்த ஆண்டு மொத்தமே 7 ஆயிரம் பறவைகள்தான் மாவட்டம் முழுவதும் வந்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய பகுதியில் கடந்த ஆண்டு வைகை தண்ணீர் அதிகளவில் வரவழைக்கப்பட்டு நீர்நிறைக்கப்பட்டது. இந்த வைகை தண்ணீர் தற்போதுவரை குறையாமல் கடல்போல் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக கண்மாய் பகுதியில் உள்ள மரங்களில் ஏராளமான பறவைகள் தங்களின் உணவுத்தேவைக்காக அங்கு குவிந்து கூடு கட்டி வசித்து வருகின்றன.

ரசிக்கும் மக்கள்

மற்ற பறவைகள் சரணாலயங்களில் பறவைகள் இன்றி சீசன் முடிவுக்கு வந்தநிலையில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் உள்ளதால் அதிகளவில் பறவைகள் கூடுகட்டி தண்ணீரில் உள்ள மீன்கள், புழுக்கள் உள்ளிட்ட உணவுகளை உண்டு பறந்து திரிந்து வருகின்றன. ராமநாதபுரம் அதிக வெயில் காரணமாக மக்கள் சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியை சுற்றி நடைபயிற்சி சென்று காற்றுவாங்கி வருகின்றனர்.

இவ்வாறு செல்பவர்கள் கண்மாயில் நிறைந்துள்ள வைகை தண்ணீரில் உள்ள மரங்களில் பறந்து திரிந்து ரீங்காரமிடும் பறவைகளின் அழகை கண்டு ரசித்து செல்கின்றனர்.


Next Story