காட்டாங்கொளத்தூரில் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்றம், சட்டமன்ற கூட்டம்


காட்டாங்கொளத்தூரில்  பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்றம், சட்டமன்ற கூட்டம்
x

பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற கூட்டம் காட்டாங்கொளத்தூரில் நடந்தது.

செங்கல்பட்டு

மாதிரி நாடாளுமன்ற கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் நாடாளுமன்றம், சட்டமன்ற அவைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்றம், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.

இதில் இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் எம்.பி., எம்.எல்.ஏ.வாக பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கேள்வி நேரம், 194-வது விதியின் கீழ் விவாதம், பின்னர் ஜனாதிபதி உரை போன்றவை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய இளைஞர் அணித்தலைவர் தேஜஸ்வி சூர்யா, மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதிரி நாடாளுமன்றம், சட்டமன்ற நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களிடம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

இளைஞர்களை பொறுத்தவரை நான் ஒன்றே ஒன்றைதான் சொல்லிக் கொள்வேன், தட்டுங்கள் திறக்கப்படும், திறக்கவில்லை என்றால் உடையுங்கள், யார் உங்களை மடை போட்டு தடுக்க முயற்சித்தாலும், அந்த மடையை உடைத்து முன்னேறுங்கள். இந்த கூட்டத்தை நடத்தி உங்களது நாக்கில் தேனை வைத்துள்ளனர். இதில் உங்களுக்கு ஆசை வர வேண்டும். வருகி்ற 2026 சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய தொகுதியின் எம்.எல்.ஏ.வாக நீங்கள் வரவேண்டும் என ஆசை வையுங்கள். அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும், வெறும் ஆசை மட்டும் வைத்தால் போதாது அதனை படிப்படியாக முன்னேற்ற வேண்டும்.

அதிக அளவில் புத்தகங்களை இளைஞர்கள் படிக்க வேண்டும். 100 நாளில் கெட்ட நாளும் அதிக அளவில் இருக்கும், நல்ல நாட்களும் அமையும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 15 பேரை தேர்வு செய்து இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம், இதன் செலவுகள் அனைத்தையும் கட்சியே ஏற்றுக்கொள்ளும், மேலும் நாளை எம்.எல்.ஏ.க்களாக ஆகும் கனவுகளை விட்டு விடாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story