'பாஜகவில் இருந்து விலகுகிறேன்' - மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அதிரடி


பாஜகவில் இருந்து விலகுகிறேன் - மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அதிரடி
x

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகினார்.

மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.

இது தொடர்பாக இன்று மதுரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த பின் அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் பேசியதாவது,

எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பாஜக கட்சியில் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும்.

திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. இது குறித்து உங்களிடம் (செய்தியாளர்கள்) கூறாமல் செய்யமாட்டேன். (திமுகவில் இணைவது) செய்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே. 10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக' என்றார்.

திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகி பாஜகவில் இணைந்தார். அவர் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அவர் மீண்டும் திமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story