அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் - சி.வி.சண்முகம் ஆவேசம்


அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் - சி.வி.சண்முகம் ஆவேசம்
x
தினத்தந்தி 13 Jun 2023 5:21 AM GMT (Updated: 13 Jun 2023 5:48 AM GMT)

அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவை விமர்சித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

"ஆளுமைகிக்க தலைவி ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. பாஜக கட்சி என்பது வேறு.. அண்ணாமலை என்பவர் வேறு. கவுன்சிலராக கூட அண்ணாமலை இருந்ததில்லை. அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். சொந்த கட்சியினரே அண்ணாமலை மீது ஊழல் புகார் கூறி வருகின்றனர். திமுகவின் 'பி' டீமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.


இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக ஒரு கட்சியினுடைய தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக கட்சியின் தலைவர் தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது அவர் கட்சியில் இல்லை. ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல மாமூல் வாங்கிட்டு இருந்திருப்பாரு." என்று கூறினார்.


Next Story