பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைப்பு


பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைப்பு
x
தினத்தந்தி 9 Oct 2023 9:15 PM GMT (Updated: 9 Oct 2023 9:15 PM GMT)

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைக்கப்பட்டன. அங்கு விபத்துகள் அதிகரித்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

கோயம்புத்தூர்

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைக்கப்பட்டன. அங்கு விபத்துகள் அதிகரித்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

நான்கு வழிச்சாலை

கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையோரங்களில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் நான்கு வழிச்சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு செல்ல தலா 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு இடைவெளி விடப்பட்டு உள்ளது.

இந்த இடைவெளி வழியாக சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக கோவில்பாளையம் முதல் சேரன் நகர், தாமரைக்குளம், கிணத்துக்கடவு, ஏழூர் பிரிவு வரை விபத்துகள் அதிகம் நடக்கிறது.

இரும்பு தடுப்புகள்

இதை தடுக்க முதற்கட்டமாக தாமரைக்குளத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள இடைவெளிகளை இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்து உள்ளனர். இதனால் அங்கு நான்கு வழிச்சாலையை கடக்க முள்ளுப்பாடி ரெயில்வே கேட் மேம்பாலத்தின் கீழ் பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உயர்மட்ட பாலம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நான்கு வழிச்சாலையை கடக்க உயர்மட்ட பாலம் கேட்டோம். ஆனால் இடைவெளி அமைத்து கொடுத்தனர். விபத்துகள் அதிகம் நடந்ததால், தற்போது இடைவெளியை மூடிவிட்டனர். இதனால் 2½ கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. எனவே உயர் மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்றனர்.


Next Story