காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு - அமைச்சர் கீதாஜீவன்


காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு - அமைச்சர் கீதாஜீவன்
x

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை இன்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்த அவர் தரமாக இருப்பதாக கூறினார். மேலும் உணவை மாணவ -மாணவிகளுக்கு பரிமாறினார்.

தொடர்ந்து உணவு சமைத்து எப்படி பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரின் உன்னதமான திட்டம். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளை சேர்ந்த 5444 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். முதல்-அமைச்சர் அறிவித்தபடி 2023 -2024 -ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தால் மாணவர்கள் கல்வி திறன் அதிகரித்துள்ளதுடன் மாணவர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது . முதல்-அமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story