நுங்கம்பாக்கத்தில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை - பழைய குற்றவாளி கைது


நுங்கம்பாக்கத்தில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை - பழைய குற்றவாளி கைது
x

சென்னை நுங்கம்பாக்கத்தில் பூட்டிக்கிடந்த தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த பழைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம், புஷ்பாநகர் பகுதியில் வசிப்பவர் ஏழுமலை (வயது 46). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது, யாரோ மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 ஜோடி வெள்ளி கொலுசுகளை கொள்ளையடித்து சென்றுவிட்டது தெரிய வந்தது.

இது குறித்து, நுங்கம்பாக்கம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் ரவிஅபிராம் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த வீடு உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதை வைத்து கொள்ளையனை அடையாளம் கண்டனர். கொள்ளையன் பெயர் விக்னேஷ்வரன் என்ற கொலா விக்கி (23). தியாகராயநகர், சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர். பழைய குற்றவாளி. அவர் மீது ஏற்கனவே 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். ஏழுமலை வீட்டில் திருடிய 16 பவுன் நகைகள் மற்றும் 4 ஜோடி கொலுசுகளையும் அவரிடம் இருந்து போலீசார் மீட்டனர்.


Next Story