கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம் - கோயம்பேடு செல்லுமா பேருந்துகள்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்


கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம் - கோயம்பேடு செல்லுமா பேருந்துகள்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
x

பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்.

சென்னை,

கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால் கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் வாகன நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்துகளின் விவரங்கள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது,

'அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம். கிண்டி, கோயம்பேட்டிற்கு மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படும்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவு வரையில் மட்டுமே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற்றப்படும் . கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது.

பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். பொங்கல் வரை ஆறு போக்குவரத்து கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து அதன் பிறகு அந்தந்த வழித்தடத்தில் இயங்கும்.

பொங்களுக்கான ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவுகள் முடிந்துவிட்டதால். ஆம்னி பேருந்துகள் பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் '

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story