கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்


கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
x

கடல் சீற்றம் காரணமாக சாலையில் கடலரிப்பு ஏற்பட்டு உள்ளதால் எண்ணூர் விரைவு சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சென்னை

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை எண்ணூர், திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம், மஸ்தான் கோவில், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கடலில் உருவாகும் ராட்சத அலைகள் தூண்டில் வளைவுகள், தடுப்பு கற்களில் மோதுவதால் கடற்கரைகளில் நிறுத்தி இருக்கும் படகுகள், வலைகள் சேதமடையும் நிலை உள்ளதால் அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீன்வளத்துறை சார்பில், கடலோரம் யாரும் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் பொருட்களை பாதுகாப்புடன் வைத்து கொள்ளும்படியும் நேற்று மதியம் வரை ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் கடலரிப்பு ஏற்பட்டது. இதனால் சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதேபோல் எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரையில் தேவாலயம் எதிரில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீரோடு சிறிய கற்களும் சாலையில் வந்து விழுந்தது. அவற்றை வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

எண்ணூர் விரைவு சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சென்று வருகின்றனர்.


Next Story