கேப்டன் விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேப்டன் விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர் - தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும், அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. முதல்-அமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர்.

நடிகர் சங்கத் தலைவராகவும் - எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும், அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், தே.மு.தி.க தொண்டர்கள், நண்பர்கள், திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com