அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி


அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி
x
தினத்தந்தி 8 Feb 2024 5:48 PM GMT (Updated: 9 Feb 2024 7:45 AM GMT)

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரை சிறப்பு கோர்ட்டுகள் சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து பல்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது.

அதே நாளில் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த வழக்கை புதன்கிழமை (நேற்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால், விசாரணை பட்டியலில் இந்த வழக்குகள் நேற்று இடம் பெறவில்லை. இதனால், தலைமை நீதிபதி உத்தரவுக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காத்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தநிலையில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ .பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி, தனக்கே ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான இந்த 4 வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 12, 13ம் தேதியும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.


Next Story