சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் இன்று தொடக்கம்


சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 Feb 2024 1:01 AM GMT (Updated: 15 Feb 2024 8:38 AM GMT)

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள தேர்வு மையங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் உள்ள தேர்வு மையங்களில் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு முன்பே வர வேண்டும். தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும். அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். காலை 10 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள். அதன் பிறகு எந்த மாணவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story