"பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர, இந்தி பாடம் நடத்த அல்ல" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்


பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர, இந்தி பாடம் நடத்த அல்ல - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 Dec 2023 10:18 AM GMT (Updated: 14 Dec 2023 10:22 AM GMT)

கோவா விமான நிலையத்தில் தமிழக பெண்ணிடம் இந்தி மொழி தொடர்பான மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை வீரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் (CISF), இந்தி மொழிதான் தேசிய மொழி என தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வாதிட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "கோவா விமான நிலையத்தில் மத்திய தொழில்படை வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், "இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா" என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.

பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை மத்திய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று அதில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Next Story