அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி மத்திய பஸ் நிலையம்


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி மத்திய பஸ் நிலையம்
x

அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி மத்திய பஸ் நிலையம் உள்ளது.

திருச்சி

மத்திய பஸ் நிலையம்

தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக திருச்சி உள்ளது. வெளியூரில் தங்கி பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது, திருச்சிக்கு வந்தே அடுத்த பஸ் மாறி சென்று வருகிறார்கள்.

திருச்சியில் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் ஆகிய இரு பஸ் நிலையங்களும் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும். இதில் சத்திரம் பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திருச்சியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்திய பஸ் நிலையம் பழமையான பஸ் நிலையமாகும்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள்

இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இங்கிருந்து நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் திருச்சிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய பஸ் நிலையத்தில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் இருமடங்கு அதிகரிக்கிறது.

இதன் காரணமாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததாலேயே திருச்சி மக்களின் 25 ஆண்டு கால கனவுத்திட்டமான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கும் பணி பஞ்சப்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அங்குள்ள கழிப்பிடத்தில் துர்நாற்றம் வீசுகிறது.

குண்டும், குழியுமான சாலைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பஸ் நிலையத்துக்குள் உள்ள சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளமான இடங்களில் மழைநீரும் தேங்கி கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பிய கரையுடன் தூய்மையற்ற நிலையில் உள்ளது. இது தவிர, பஸ்களும் வரன்முறையின்றி தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இரவுநேரத்தில் சென்னை உள்பட ஒரு சில ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் குறைக்கப்பட்டு விடுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து மதுரையை சேர்ந்த சந்திரன் என்ற பயணி கூறும்போது, நான் வேலை நிமித்தமாக அடிக்கடி திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்து செல்வேன். இங்கு இலவச கழிப்பிடம் என எழுதி வைத்துவிட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆங்காங்கே துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார மற்ற சூழல் உள்ளது. இதை சரி செய்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பஸ் நிலையத்தை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளும் உள்ளன. இதனாலும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்றார்.

கூடுதல் பஸ்கள் தேவை

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஷெல்லி தினேஷ் கூறும்போது, மத்திய பஸ்நிலைய நடைமேடைகளில் கான்கிரீட் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு அந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கிறார்கள். பல ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இன்றி மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து எங்கள் பகுதிக்கு செல்கிற பஸ்களில் எந்நேரமும் கூட்ட நெரிசலுடன் தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆகவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த கூலி தொழிலாளி பெரியசாமி கூறுகையில், மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் காலை வந்து வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் பஸ் ஏறி வீடு திரும்புவேன். இங்கு ஒரு சில இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வெளியே செல்கிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள். ஆனால் முன்பு இருந்ததைவிட தற்போது ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story