தூத்துக்குடி: மழை, வெள்ள பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்த மத்தியக்குழு...!


தினத்தந்தி 20 Dec 2023 7:11 AM GMT (Updated: 20 Dec 2023 7:18 AM GMT)

தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகனமழை வெளுத்து வாங்கியது.

தூத்துக்குடி,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.

அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது மழை நின்றுள்ளதால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளை சூழ்ந்திருந்த வெள்ளநீர் தற்போது மெல்ல வடியத்தொடங்கியுள்ளது.

அதேபோல், மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு இன்று தூத்துக்குடி வந்துள்ளது. விமானம் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையில் விஜயகுமார், தங்கமணி, பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழு தூத்துக்குடி வந்துள்ளது.

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்கு பின் வெள்ள பாதிப்பு விவரங்களை இந்த குழு மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது.


Next Story