மீன்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்


மீன்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான குன்றுகாடு, கொக்கிலமேடு, புது நெம்மேலி, நெம்மேலிகுப்பம், புது கல்பாக்கம், சூளேரி காட்டுக்குப்பம், படூர் ஆகிய இந்த 7 மீனவ கிராமங்களில் காலியாக உள்ள 7 பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேற்படி மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 1.7.2023 அன்றைய தேதிபடி வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15 ஆயிரம் .வழங்கப்படும்.

கல்வித் தகுதி: மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளில் முதுகலை, இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், தாவரவியல், உயிர் வேதியியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை, இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் 12.9.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,எண்:2/601 கிழக்கு கடற்கரை சாலை,நீலாங்கரை, சென்னை,மின்னஞ்சல் : adfmnkpm@gmail.com, செல்போன் எண்: 9840156196. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story