சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 6 Aug 2023 6:01 AM GMT (Updated: 6 Aug 2023 6:20 AM GMT)

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட அவர், ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளிக்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து மசினகுடியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் மைசூரு புறப்பட்டு சென்றார்.

அதன்பின்னர் மைசூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கி ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில், இன்று கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வரும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கவர்னர் மாளிகையில் உள்ள மைதானத்தில், ஜனாதிபதிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி வருகையையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story