இன்று மாலை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானல் பயணத்தை நிறைவு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.
இன்று மாலை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29- ந்தேதி தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக சென்றார். பாம்பார்புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி ஓய்வு எடுத்தனர். தனது ஓட்டலிலேயே நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பசுமை பள்ளத்தாக்கில் உள்ள கோல்ப் மைதானத்திற்கு சென்று கோல்ப் விளையாடினார்.

அதன்பின் விடுதிக்கு திரும்பியபோது ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின் ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவரது அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மாலையில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தார். அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் துர்கா ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், 5 நாட்கள் ஓய்வுக்காக கொடைக்கானலுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4- ந்தேதி வரை இங்கு தங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை அவர் சென்னை திரும்ப உள்ளார்.

இதற்காக கொடைக்கானல் ஓட்டலில் இருந்து கார் மூலம் பிற்பகலில் மதுரைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வர உள்ளார். இதையொட்டி அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com