முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தஞ்சாவூர் கல்லுக்குளம் பகுதியை சேர்ந்தவர் உபயதுல்லா (வயது 83). தி.மு.க மூத்த தலைவர். இவர் 4 முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். இதில் கடந்த 2006-2011 காலகட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சியின் போது வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது தி.மு.க மாநில வர்த்தக அணி தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் இன்று தஞ்சையில் உள்ள ஒரு மண்டபத்தில் உபயதுல்லாவின் பேரனுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை இவர் தலைமை தாங்கி நடத்த இருந்தார். இதற்காக இன்று காலை புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

இதையடுத்து தஞ்சையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது. ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் உபயதுல்லா உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர், திமுக முன்னாள் நகர செயலாளர், மூத்த தலைவர் எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த திரு. உபயதுல்லா அவர்கள், என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர்.

1962-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அவரது நன்மதிப்பைப் பெற்றவர். மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்.

1987 முதல் 2014 வரை 27 ஆண்டுகள் தஞ்சை நகரக் கழகச் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் உபயதுல்லா அவர்கள். நான்கு முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றிய உபயதுல்லா அவர்கள் 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது வணிக வரித்துறை அமைச்சராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தமிழறிஞர் மீது மட்டுமல்லாது, தமிழ்மொழி மீதும் காதல் கொண்டிருந்த உபயதுல்லா அவர்கள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கழகப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் 'கலைஞர் விருதினையும்', இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் 'பேரறிஞர் அண்ணா விருதினையும்' எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன்.

கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் திரு. உபயதுல்லா அவர்கள். கழகத்தின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய திரு. உபயதுல்லா அவர்களின் மறைவு கழகத்துக்கும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகத்துக்கும் பேரிழப்பு என்றே கூற வேண்டும். உபயதுல்லாவை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story