திருச்சியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!


திருச்சியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!
x
தினத்தந்தி 9 Jun 2023 6:28 AM GMT (Updated: 9 Jun 2023 7:55 AM GMT)

திருச்சியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

திருச்சி,

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடிக்காக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலையில் தஞ்சையை அடுத்த ஆலக்குடியில் உள்ள முதலைமுத்துவாரியில் நீர்வழித் தடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் பின்னர் பூதலூர் தாலுகா விண்ணமங்கலம் வென்னாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூர் கூழையாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வரைபடம், புகைப்படம் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ரூ.23.50 லட்சம் மதிப்பில் சுமார் 15 கிமீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.


அதன்பின்னர், புள்ளம்பாடி இருதயபுரம் நந்தியாறு தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். நந்தியாற்றில் 5.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.1.94 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளபடுகிறது. நந்தியாறு ஆற்றின் இருபுறமும் இருந்த 120 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது. நந்தியாறு தூர்வாரப்படும் பணிகள் மூலம் 5,775 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story