நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு


நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
x

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

ஆய்வு

நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. கடல்சார் பணிகள், எந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக, கடல்நீரை உட்கொள்ளும் குழாயில், 835 மீட்டர் நீளத்திற்கு குழாய் கடலில் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது, மேலும் 200 மீட்டர் நீளத்திற்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவே இந்தியாவின் மிக பெரிய கடல்நீரை உட்கொள்ளும் குழாயாகும்.

விரைந்து முடிக்க...

இந்த நிலையத்தில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பொருட்டு, 48.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

இந்த நிலையத்தில் இருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித்தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயனடைவர் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாமல்லபுரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள சோழி பொய்கை குளம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளம் ரூ.90 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த குளத்தையும் தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் ஆர்.கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளர் ஜி.பி.வைதேகி, செயற்பொறியாளர் எஸ்.கிருபாகரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story