இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி கைவரிசை: இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.1.30 லட்சம் மோசடி - 'டிமிக்கி' வாலிபர் கைது


இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி கைவரிசை: இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.1.30 லட்சம் மோசடி - டிமிக்கி வாலிபர் கைது
x

இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.1.30 லட்சம் மோசடி செய்து ‘டிமிக்கி’ கொடுத்து வந்த வாலிபர் பிடிபட்டார்.

சென்னை

சென்னை ராயபுரம் அப்பை யர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் பில்லிங் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் பழவந்தாங்கலை சேர்ந்த உமா மகேஷ் (வயது 24) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் சி.சி.டி.வி.கேமரா பொருத்தும் வேலை பார்த்து வந்தநிலையில், இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.

நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட உமா மகேஷ் இளம் பெண்ணிடம் தனது குடும்ப ஏழ்மையை கூறி பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய இளம்பெண் 'கூகுள்பே' செல்போன் செயலி மூலம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இளம் பெண்ணுக்கு உமா மகேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, வாங்கிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் தராமல் 'டிமிக்கி' கொடுத்து வந்துள்ளார். பின்பு செல்போன் மூலம் உமா மகேஷை தொடர்பு கொண்ட இளம்பெண், உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி ராயபுரம் பகுதிக்கு வர வைத்துள்ளார். அப்போது, இளம்பெண்ணும் அவருடைய உறவினர்களும் சேர்ந்து உமா மகேஷை மடக்கி பிடித்து ராயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இளம்பெண் அளித்த புகாரில், பண மோசடியில் ஈடுபட்ட உமா மகேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story