கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை - கலெக்டர் அடிக்கல் நாட்டினார்


கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை - கலெக்டர் அடிக்கல் நாட்டினார்
x

கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே 17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டு பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க அரசாணை வாயிலாக நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பணையானது 200 மீட்டர் நீளத்திலும் 150 மீட்டர் உயரத்திலும் அதிகத்தூர் - ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ளது.

இந்த தடுப்பணை அமைவதன் மூலம் அருகில் உள்ள கிராமங்களான அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டும் உயரும். இதனால் சுமார் 540 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாக ஏதுவாக அமையும்.

இந்த தடுப்பணை கட்டப்படுவதற்கான பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் கொசஸ்தலையாறு கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், நீர்வளத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story