விவசாயிகளுக்கு மானிய விலையில் பொருட்கள் - அதிகாரி தகவல்


விவசாயிகளுக்கு மானிய விலையில் பொருட்கள் - அதிகாரி தகவல்
x

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியத்தில் நடப்பாண்டில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டாபிராமபுரம், மாம்பாக்கம், பெரியகடம்பூர், கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம் மற்றும் வீரகநல்லுார் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் 299 விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் மானிய விலையில், கடப்பாறை, மம்முட்டி, தாலம், 2 அரிவாள், ஒரு கலைக்கொத்தி ஆகிய பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இதன் மொத்த அடக்க விலை ரூ.2,993 ஆகும். இதில் விவசாயிகளுக்கு ரூ.1,460 மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.1,533 திருத்தணி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் செலுத்தி மேற்கண்ட விவசாய கருவிகள் பெறலாம்.

இது குறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மேற்கண்ட 6 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் வேளாண் உதவி அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று ஆன்லைன் மூலம், நிலத்தின் சர்வே, சிட்டா, அடங்கல், விவசாயி போட்டோ மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றிடன் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகையில் செயல்பட்டு வரும் வேளாண் விரிவாக்க மையத்தில் மானியம் தொகை போக மீதி தொகையை செலுத்தி கருவிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.


Next Story