குரூப்- 2 தேர்வுக்கான அனுமதி சீட்டில் குழப்பம்


குரூப்- 2 தேர்வுக்கான அனுமதி சீட்டில் குழப்பம்
x

குரூப்- 2 தேர்வர்களுக்கான அனுமதி சீட்டில் ஒரு தேர்வு மையத்தில் அறை எண் 39-க்கான தேர்வு மைய முகவரி மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் உரிய தேர்வு மையத்திற்கு செல்லுமாறு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தி உள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி:

முகவரி மாறி குழப்பம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு பதவிகளுக்கான குரூப்-2 முதல்நிலை போட்டித்தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் 136 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வை 37 ஆயிரத்து 366 தேர்வர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு எழுதுபவர்களுக்கான அனுமதி சீட்டில் தேர்வு அறை எண், தேர்வு மைய முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி பி. அக்ரஹாரம், பென்னாகரம் மெயின் ரோடு என்ற தேர்வு மையத்தில் அறை எண் 39-ல் தேர்வு எழுதுபவர்களுக்கு உரிய அனுமதி சீட்டில் தேர்வு மைய முகவரி மாறி குழப்பம் ஏற்பட்டிருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அறை எண் 39-ல் தேர்வு எழுதுபவர்கள் தங்களுக்கு உரிய தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

அறிவுறுத்தல்

இதுதொடர்பாக கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 போட்டி தேர்வு நாளை தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத உள்ள தேர்வர்களின் அனுமதி சீட்டில் அறை எண் 039, அரசு மேல்நிலைப்பள்ளி, கூலி கொட்டாய், ராஜா கொல்லஅள்ளி அஞ்சல், பி.அக்ரஹாரம், நல்லம்பள்ளி தாலுகா என இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக அரசு மேல்நிலைப்பள்ளி, பி.அக்ரஹாரம், பென்னாகரம் மெயின் ரோடு என்பதே உரிய தேர்வு மையம் ஆகும். எனவே அறை எண் 039-ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பி.அக்ரஹாரம், பென்னாகரம் மெயின் ரோடு என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வை எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story