போக்குவரத்து நெரிசல், விபத்தை தடுக்க தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு


போக்குவரத்து நெரிசல், விபத்தை தடுக்க தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு
x

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை தடுக்க தண்ணீர் லாரிகளுக்கு போலீசார் நேரக்கட்டுப்பாடு விதிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் ஆங்காங்கே முக்கிய சாலைகளில் நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுவதால், அதனாலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன.

கடந்த வாரம், சென்னை கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி, தனது தாய் கண் எதிரேயே பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் தண்ணீர் லாரிகள் சென்னைக்குள் வருவதற்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நேரக்கட்டுப்பாடுகளை போக்குவரத்து போலீசார் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சென்னை குடிநீர்வாரிய அதிகாரிகளுடன் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

அந்த கூட்டத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள காலை 7 மணிமுதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் தண்ணீர் லாரிகளை சென்னை நகருக்குள் அனுமதிக்கக்கூடாது என்பதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

இதையொட்டி நேற்று வடசென்னை பகுதியில் மேற்கண்ட நேரக்கட்டுப்பாட்டை மீறி வந்த தண்ணீர் லாாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வருவதற்கு ஏற்கனவே இதுபோன்ற நேரக்கட்டுப்பாடுகள் செயல்பாட்டில் உள்ளது என்றும், அதையும் தீவிரமாக செயல்படுத்தவும் போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story