தர்மபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலையை தரமாக அமைக்க வேண்டும்மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


தர்மபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலையை தரமாக அமைக்க வேண்டும்மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jun 2023 5:00 AM GMT (Updated: 1 Jun 2023 5:00 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஊராட்சிக்குழு கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் கருணாநிதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து ெகாண்டனர்.

கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானியத்திட்டம் மற்றும் 15-வது மத்திய நிதி குழு மானியத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிர்வாக ஒப்புதல் வழங்கி மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 53 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள ரூ.2 கோடியே 48 லட்சம் நிதிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து ஒப்புதல் அளித்தனர்.

தரமற்ற சாலை

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், தர்மபுரி-அரூர் இடையே புதிய 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்த பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படுகிறதா? என்பதும் தெரியவில்லை.

மேலும் சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று தொடர்ந்து 3 முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை. எனவே கலெக்டர் இந்த சாலை பணியை ஆய்வு மேற்கொண்டு தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறைக்கு மீண்டும் கடிதம் எழுதுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story