தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விரிசல்


தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விரிசல்
x
தினத்தந்தி 17 Oct 2023 7:15 PM GMT (Updated: 17 Oct 2023 7:15 PM GMT)

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் தொடர் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

நீலகிரி

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் தொடர் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளது. இதனால் சுற்றுலா, சரக்கு வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறது. இந்தநிலையில் ஊட்டியில் இருந்து கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் பழுதடைந்த பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் பகுதியில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. அங்கு தற்போது புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து தடைபடாமல் இருக்க முதல்கட்டமாக ராட்சத தடுப்புச்சுவர்கள் கட்டும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.

பாலத்தில் விரிசல்

இந்த சமயத்தில் பழைய பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இதனால் பாதுகாப்பு கருதி வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் பழுதடைந்த பாலத்தின் மேற்புறம் உள்ள மண் மேட்டை சமப்படுத்தி ஒரு புறம் வழியாக வாகன போக்குவரத்து தொடங்கியது. இந்தநிலையில் கூடலூர் பகுதியில்பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலத்தையொட்டி மண் சரிவு ஏற்படுகிறது.

இதன் காரணமாக புதிய பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இதற்கிடையே தொடர் மழையால் பழைய பாலத்தில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதையடுத்து பழைய பாலத்தில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருவதால், அதிக பாரம் கொண்ட வாகனங்களை இயக்க தடை விதித்து உள்ளனர். மேலும் பாலத்தின் மேற்புறம் கூடுதலாக விரிவாக்கம் செய்து தற்காலிகமாக வாகனங்களை அந்த வழியாக இயக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதைத்தொடர்ந்து விரிவாக்க பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, போக்குவரத்து தடையின்றி நடைபெற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story