ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல்


ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல்
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

தண்டவாளத்தில் விரிசல்

விழுப்புரத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு மயிலாடுதுறைக்கு தினமும் பயணிகள் ரெயில் புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை வழக்கம்போல் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் காலை 6.30 மணியளவில் விழுப்புரம் அருகே சேர்ந்தனூருக்கும், கடலூர் மாவட்டம் திருத்துறையூருக்கும் இடையே சென்றபோது தண்டவாளத்தில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த ரெயில் என்ஜின் டிரைவர், உடனடியாக அப்பாதையில் சீரான வேகத்தில் ரெயிலை இயக்கினார். பின்னர் இதுபற்றி அவர், திருத்துறையூர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லியை சேர்ந்த மஞ்சு (வயது 22) என்பவர், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தம்

தகவலின்பேரில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாள பாதையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த விரிசலை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையே திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவ்வழியாக வந்துகொண்டிருந்தது. உடனே ரெயில்வே அதிகாரிகள், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் அந்த ரெயில் காலை 7.10 மணிக்கு திருத்துறையூருக்கும், பண்ருட்டிக்கும் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

1 மணி நேரம் தாமதம்

தொடர்ந்து, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யும் பணி நடந்தது. சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு அப்பணி முடிந்தது. விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாள பகுதியில் தற்காலிகமாக கிளாம்ப் மூலம் வெல்டிங் வைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.

அதன் பிறகு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு காலை 7.30 மணிக்கு வர வேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலின் இந்த தாமதம் காரணமாக பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.


Next Story