கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் போராட்டம் மீண்டும் வேலை வழங்க கோரிக்கை


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் போராட்டம் மீண்டும் வேலை வழங்க கோரிக்கை
x

மீண்டும் வேலை வழங்க கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் போராட்டம் நடத்தினா்.

கடலூர்

கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்காக மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி கடலூர் மாவட்டத்தில் 72 செவிலியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது, அவர்கள் கொரோனா காலத்தில் உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றி வந்த எங்களுக்கு அரசு மீண்டும் வேலை வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story