'மிக்ஜம்' புயல்: 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


மிக்ஜம் புயல்: 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

கோப்புப்படம்

புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு `மிக்ஜம்' என பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. இது நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், புயல் தொடர்பாக அதிக காற்று வீசுவதை குறிக்கும் வகையில் காட்டுப்பள்ளி, எண்ணூர் காமராஜர், சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதேபோல், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கப்பல்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றமாக இருப்பதால், அதிகமான உயரத்தில் அலைகள் கரையில் வந்து மோதுவதையும் காணமுடிகிறது.


Next Story