அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு


அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 Oct 2023 6:30 AM GMT (Updated: 9 Oct 2023 6:31 AM GMT)

அரியலூர் நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர்,

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவரின் நாட்டு பட்டாசுகள் தயாரிப்பு ஆலையில் திடீரென விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் 9 பைக்குகள், ஒரு டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்து வெற்றியூர் கிராமம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.


Next Story