ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பத்திரிகை, திரைத்துறையில் ராமோஜி ராவ்வின் பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.
சென்னை,
ஊடகவியலாளரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஈநாடு குழும நிறுவனங்கள், ராமோஜி குழுமத்தின் தலைவருமான சி.எச். ராமோஜி ராவ் (88) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு காலமானார்.
தற்போது, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்துவரப்பட்டு ஐதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியாக பொறுபேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பத்ம விபூஷன் திரு.ராமோஜி ராவ் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. திரைத்துறை, பத்திரிக்கை துறையில் ராமோஜி ராவின் அளப்பரிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும். துயரமான நேரத்தில் ராமோஜி ராவின் குடும்பத்தினர், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.






